முகப்பு
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய பாஜகவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்து முதல்வர் ஸ்டாலின் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:37 PM
முதல்வர் ஸ்டாலின் - படம்: எக்ஸ்.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:06 PM

தொகுதி மறுவரையறை தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் இறுதி எச்சரிக்கை விடுத்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த விடியோ பதிவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டின் வாசல் வரை வந்துவிட்ட பேராபத்து பற்றி சொல்லவும், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவும்தான் இந்த விடியோ. தேர்தல் பிரசாரத்துக்காக மட்டும் அல்லாமல், ஓடிக்கிட்டே இருந்தாலும், இந்தக் கடமை தவிர்க்க முடியாதது. நாளை மறுநாள் ஏப். 16 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது.

Advertisement

தமிழ்நாடு, மேற்கு வங்க பேரவைத் தேர்தலுக்கு நடுவில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை என்கிற சட்டத்திருந்தத்தை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப் போகிறார்கள். முதலில் இருந்தே நாம் தொடர்ந்து எச்சரித்தோம்.

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள பாதிப்படையக் கூடிய மாநிலங்களின் முதல்வர்களையும், முக்கியக் கட்சிகளின் தலைவர்களையும் சென்னை அழைத்து கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடத்தினோம். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துங்கள், அளவாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள், குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள் என்று மத்திய அரசு கூறியதையெல்லாம் நாங்கள் கேட்டோம்.

Updated On : 14 ஏப்ரல், 2026 at 1:33 PM

சொன்னதையெல்லாம் ஒழுங்காக செய்ததற்காகவே, எங்களுக்கு தண்டனை கொடுப்பீர்களா? தென் மாவட்டங்கள் எல்லாம் பாதிப்படையாது என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும் கேட்டிருந்தோம். ஆனால், அதற்கு எந்த பதிலும் இல்லை. இதற்காக பல்வேறு கட்சி எம்.பி.க்கள் நேரில் சந்திந்து முறையிட நேரம் கேட்டிருந்தோம். அதுவும் கிடைக்கவில்லை.

இப்படி நாம் சொன்ன எதையும் அவர்கள் காதில் வாங்காமல், திமுகவோடு மட்டுமல்ல; எந்தக் கட்சியோடும், எந்த மாநிலத்தோடும் கலந்து ஆலோசனை நடத்தாமல், அவர்கள் இஷ்டத்திற்கு செய்யப் பார்க்கிறார்கள்.

நேற்று மரியாதைக்குரிய சோனியா காந்தியும், நாம் கேட்டிருந்த அதே கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் பதில் இல்லை. இப்படி அவசர அவசரமாக தொகுதி மறுவரையறை செய்ய நினைப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல்.

இன்னும் சொல்லப் போனால், மாநில உரிமைகளை மத்திய அரசு படுகொலை செய்திருக்கிறது. இந்தத் தொகுதி மறுவரையறை எப்படி செய்யப் போகிறார்கள் என்பது பற்றி தெரியவில்லை. அந்த சட்டத் திருத்தம் என்ன என்பது பற்றி எந்த விளக்கமும் அவர்கள் அளிக்கவில்லை.

இவர்கள் இப்படி மறைத்து மறைத்து செய்வதால், இதன்பின்னால் எதோ பெரிய ஆபத்து இருக்கிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலுமே வலுவடைகிறது. தென் மாநில மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள். நான் மத்திய பாஜக அரசுக்கும் பிரதமர் மோடிக்கும் இந்த நேரத்தில் முக்கியமான ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

வருகிற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் இருந்து எங்கள் எம்பிக்கள் கலந்துகொள்வார்கள்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டைப் பாதிக்கின்ற மாதிரியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்குகின்ற மாதிரியோ எதாவது நடந்தால், தமிழ்நாட்டில் இருக்கின்ற நாங்களை அனைவரும் சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும். தமிழ்நாடு தனது எதிர்ப்பை கடுமையாகக் காட்டும். ஒவ்வொரு குடும்பமும் தெருவில் வந்து உட்காருவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Stalin has released a video issuing a final warning to the central BJP regarding constituency delimitation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.