முகப்பு
சென்னை

இம்மாத இறுதிக்குள் நேரு பூங்கா-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து

சென்னை நேரு பூங்கா-சென்ட்ரல் ரயில் நிலையம், சின்னமலை- ஏ.ஜி. டிஎம்எஸ் அலுவலகம் (தேனாம்பேட்டை) இடையே பணிகள் முடிக்கப்பட்டு மே மாத இறுதிக்குள் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக

Updated On : 15 மே, 2018 at 10:23 AM
ஷெனாய் நகரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலான மெட்ரோ சுரங்க ரயில் இருப்புப் பாதையை திங்கள்கிழமை ஆய்வு செய்த பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் மற்றும் மெட்ரோ ரயில்வே அதிகாரிகள்.
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

சென்னை நேரு பூங்கா-சென்ட்ரல் ரயில் நிலையம், சின்னமலை- ஏ.ஜி. டிஎம்எஸ் அலுவலகம் (தேனாம்பேட்டை) இடையே பணிகள் முடிக்கப்பட்டு மே மாத இறுதிக்குள் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேரு பூங்கா- விமான நிலையம், சின்னமலை-விமான நிலையம், ஆலந்தூர்-பரங்கிமலை இடையே சுமார் 40 கி.மீ. தூரத்துக்கு தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 

இரண்டாம் கட்டமாக நேரு பூங்கா- சென்ட்ரல் ரயில் நிலையம், சின்னமலை- ஏ.ஜி. டிஎம்எஸ் அலுவலகம் (தேனாம்பேட்டை) இடையிலான பணிகள் அண்மையில் நிறைவடைந்தன. இதையடுத்து, இந்த வழித்தடங்களில் தற்போது சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்குவது குறித்து பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையில் அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் கே.ஏ.மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியது:
ஷெனாய் நகர்- நேரு பூங்கா வரை உள்ள முதல் வழித்தடத்தில் தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. 5.6 கி.மீ. தொலைவுள்ள இதன் இரண்டாம் வழித்தடம், 2.5 கி.மீ. தொலைவுள்ள நேரு பூங்கா-சென்ட்ரல் ரயில் நிலையம் இடையிலான 1-ஆவது வழித்தடம் என மொத்தம் சுமார் 8 கி.மீ. தூரமும், சின்னமலை- ஏ.ஜி. டி.எம்.எஸ். (தேனாம்பேட்டை) இடையே உள்ள 4.5 கி.மீ. வழித்தடத்திலும் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் டிராலி மூலமும், மெட்ரோ ரயிலை 80 கி.மீ. வேகத்தில் இயக்கியும் சோதனை நடத்தப்படுகிறது.
சுரங்க ரயில் பாதையில் பாதுகாப்பான முறையில் ரயில் இயக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள சாதனங்கள், சிக்னல்கள் செயல்படும் விதம், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வுப்பணி நிறைவடைந்ததும், ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
வரும் 18, 19-ஆம் தேதிகளில் சின்னமலை- ஏ.ஜி. டி.எம்.எஸ் (தேனாம்பேட்டை) இடையிலான 4.5 கி.மீ. தூரம் கொண்ட வழித்தடத்தில் ஆய்வு நடைபெறவுள்ளது என்றார்.
மே இறுதிக்குள் மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்பு: இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியது: "சென்னை நேரு பூங்கா-சென்ட்ரல் ரயில் நிலையம், சின்னமலை- ஏ.ஜி. டிஎம்எஸ் (தேனாம்பேட்டை) இடையே ரயிலை இயக்குவதற்கான சான்று கிடைத்தவுடன், மே மாத இறுதிக்குள் இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயிலை இயக்க வாய்ப்புள்ளது' என்றனர்.
ஆய்வின்போது, மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், சுரங்கப் பாதைப் பணிக்கான பொது மேலாளர் வி.கே.சிங், அதிகாரி நரசிம்மபிரசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.