மனித உரிமை மீறல்: பெண் காவல் ஆய்வாளருக்கு ரூ. 2 லட்சம் அபராதம்
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சென்னை, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சென்னை, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
சென்னை மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த ரகுநாதன் மகன் பாபு, சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:
எனக்கும், தங்கமணி மகள் பரணிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன் உள்ளார். திருமணத்துக்குப் பின் எனது வீட்டாருக்கும், மனைவி பரணிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பணி நிமித்தமாக நான் அமெரிக்கா சென்றுவிட்டேன். அப்போது, என்னிடமோ, எனது வீட்டில் உள்ளவர்களிடமோ தெரிவிக்காமல் எனது மனைவி பரணி அவரது தந்தை வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
பொய்ப் புகார்: இதைத் தொடர்ந்து, நானும், எனது வீட்டாரும் கொடுமைப்படுத்துவதாக சென்னை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2013 ஆகஸ்ட் 26-இல் பரணி பொய்ப் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து அனுப்பப்பட்ட அழைப்பாணையின்பேரில், நானும், எனது குடும்பத்தாரும் ஆஜரானோம்.
அங்கு, எங்களை விசாரித்த காவல் ஆய்வாளர் டி.செல்வகுமாரி எங்களை அமரக் கூட அனுமதிக்கவில்லை. பரணி வீட்டார் முன் எங்களை நிற்க வைத்தே விசாரணை நடத்தியதுடன், தகாத வார்த்தைகளால் எங்களைத் திட்டினார். எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ரூ.2 லட்சம் அபராதம்: இந்த மனுவை விசாரித்த மனித உரிமை நீதிபதி டி.ஜெயச்சந்திரன் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பில், பாபு விவகாரத்தில் உரிய சட்ட விதிகளை காவல் ஆய்வாளர் டி.செல்வகுமாரி கடைப்பிடிக்காதது விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ஆய்வாளர் டி.செல்வகுமாரிக்கு ரூ. 2 லட்சம் அபராதமும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். மேலும், அபராதத் தொகையை அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.