சென்னையில் சாதாரணக் கட்டணப் பேருந்துகளை பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சம் ரூ.5' என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 800 வழித்தடங்களில் 3,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் நாள்தோறும் 35 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வை அடுத்து பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது.
இதையடுத்து பயணிகளைக் கவரும் வகையில் மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக டீலக்ஸ் பேருந்துகளை சாதாரண கட்டணப் பேருந்துகளாக மாற்றி இயக்கி வருகின்றனர்.
எளிதில் அடையாளம் காண: இந்நிலையில் சாதாரண கட்டணப் பேருந்தை பயணிகள் எளிதில் அடையாளம் காணும் வகையில் புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ரூ.5' என்ற ஸ்டிக்கர் அனைத்து சாதாரணப் பேருந்துகளின் முன்பக்க கண்ணாடியிலும், பயணிகள் ஏற, இறங்க பயன்படுத்தும் படிக்கட்டுகளின் அருகிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் சுமார் 1,100 பேருந்துகள் சாதாரணக் கட்டணப் பேருந்துகளாக இயக்கப்படுகின்றன.
இவற்றில் கட்டண உயர்வுக்குப் பிறகு பயணிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்தது உண்மைதான். எனவே பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக சாதாரணப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.
இந்நிலையில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளை அடையாளம் காணுவதில் பயணிகளுக்கு சிரமம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, சாதாரண பேருந்துகளை தனித்து அடையாளம் காணும் வகையில் குறைந்தபட்சம் ரூ.5' என குறிப்பிடப்பட்ட புதிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெறத் தொடங்கியுள்ளது. இதனால் படிப்படியாக சாதாரணப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம்.
கடந்த சில மாதமாக தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து பயணிகள் மீண்டும் மாநகரப் பேருந்தை நாடத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சுமார் 70 ஆயிரம் பயணிகள் மீண்டும் மாநகரப் பேருந்தில் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர் என்றனர்.