சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை வழி சிகிச்சை முறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் மருத்துவமனையின் பாரம்பரிய மருத்துவ சிகிச்சைத் துறை மருத்துவர்கள், பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். சமூகத்தில் பெரும்பாலான மக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள், அதுகுறித்த புரிதலும், முறையான சிகிச்சையும் அவசியம் என்றனர்.
மேலும், சூரிய ஒளி சிகிச்சை, மண் குளியல், காந்த சிகிச்சை, அக்குபஞ்சர் ஆகிய இயற்கை வழி சிகிச்சை முறைகள் குறித்த முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் அவர்கள் எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி, இயற்கை வழி மருத்துவர் அம்பிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.