ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, சென்னை அசோக்நகர் உதவி ஆணையர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
அசோக்நகர் 4-ஆவது நிழற்சாலையில் ரையான் ரெக்ரியேசன் கிளப்பின் தலைவராக இருப்பவர் கி.செந்தில்குமரன் (37). முறையான அனுமதி பெற்று இந்த கிளப் நடத்தப்படுகிறது. இங்கு "ஸ்பா' நடத்துவதற்கு அசோக்நகர் உதவி ஆணையராக இருக்கும் வின்சென்ட் ஜெயராஜ் மாதம் ரூ.50 ஆயிரம் மாமூல் தரும்படி கேட்டு வந்தாராம்.
இதுகுறித்து செந்தில்குமரன், லஞ்ச ஒழிப்புத்துறையில் அண்மையில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், செந்தில்குமரனிடம் வேதிப் பொருள் தடவிய ரூ.50 ஆயிரத்தை கொடுத்தனர். அந்தப் பணத்தை செவ்வாய்க்கிழமை நண்பகல் அசோக்நகர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் இருந்த உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜியிடம் செந்தில்குமரன் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வின்சென்ட் ஜெயராஜை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.