சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாமில் 129 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்தனர். மக்களவைத் தேர்தலையொட்டி, இறுதி வாக்காளர் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில், விடுபட்ட 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து உறவினர்களால் கை விடப்பட்டவர்கள், குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் மருத்துவமனை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமில், 129 பேர் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பம் அளித்தனர். இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு விரைவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.