சென்னை கிண்டியில் உள்ள பழைய இரும்புக் கடையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருள்கள் எரிந்து நாசமாகின.
சென்னை கிண்டியில் உள்ள காந்தி சந்தையில் தனியாருக்குச் சொந்தமாக பழைய இரும்பு உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்தக் கடைக்குப் பின்புறம் வைக்கப்பட்டிருந்த பழைய இன்ஜின் ஆயில் உள்ளிட்ட பொருள்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை தீப்பற்றியது.
இந்தத் தீயானது, மளமளவென பழைய இரும்புக் கடைக்கும் பரவியது. இதையறிந்து உடனடியாக அப்பகுதிக்கு வந்த கிண்டி தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால், தீ கட்டுக்குள் வராததால் அருகில் உள்ள தேனாம்பேட்டை, அசோக் நகர், சைதாப்பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களும், சென்னை குடிநீர் வாரியத்துக்குச் சொந்தமான 2 வாகனங்களும் வரவழைக்கப்பட்டன. இதையடுத்து, நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் தீ அணைக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு: இந்த தீ விபத்தால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக காந்தி சந்தைப் பகுதி, கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து கிண்டி பேருந்து நிலையம் வருவதற்கான சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து கிண்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.