சென்னை

முதல்வர் பங்கேற்ற விழாவில் கரோனா விதிமீறல் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

ஆளுங்கட்சி முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு நிகழ்ச்சியில் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவொற்றியூரைச் சேர்ந்த வழக்குரைஞர் தொண்டன் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில், கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம்  தளர்த்தப்பட்ட பின்னர், முக கவசம் அணிதல்,  தனிமனித விலகலை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுக முதல்வர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்த நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளின் போது அதிமுகவினர், கரோனா விதிகளை பின்பற்றவில்லை. 

அரசை நடத்தும் அமைச்சர்களும், எம்எல் ஏக்களும், கரோனா விதிகளை காற்றில் பறக்கவிட்டு, கட்சியினரை ஒன்று கூட அனுமதித்துள்ளனர். எனவே விதிகளை பின்பற்றி, உதாரணமாக இருக்க வேண்டிய அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன்,ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், மனுதாரர் குறிப்பிட்டுள்ள நாளில் அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து, மனுதாரர் தாக்கல் செய்த புகைப்படங்களில் இருந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், தனி மனித விலகல் பின்பற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனு தொடர்பாக, தமிழக சுகாதார துறை செயலாளர்,  சென்னை மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் பேரிடர் மேலாண்மை மைய தலைவர் ஆகியோர் வரும் ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT