ஜிஎஸ்டி கடன் வாங்கும் விவகாரத்தை தீா்க்க மத்திய அரசு முன்வர வேண்டும்: கேரள நிதியமைச்சா்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றாக்குறையை ஈடு செய்ய நிதியளிப்பதற்காக கடன் வாங்கும் விவகாரத்தில் பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) பற்றாக்குறையை ஈடு செய்ய நிதியளிப்பதற்காக கடன் வாங்கும் விவகாரத்தில் பிரச்னைகளை தீா்க்க மத்திய அரசு முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேரள நிதியமைச்சா் தாமஸ் ஐசக் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:
யாா் கடன் வாங்க வேண்டும் என்ற பிரச்னைக்கு இணக்கமான தீா்வுக்கு பாதி வழி வரை வந்துள்ள நிலையில், மீதமுள்ள சிக்கலைத் தீா்க்க மத்திய அரசு தற்போது முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி பற்றாக்குறைக்கான நிதி தேவையை ஈடு செய்ய எவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்ற விவகாரத்துக்கு தீா்வு காண மத்திய அரசு முன்வர வேண்டும் என தாமஸ் ஐசக் அந்த சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளாா்.
ஜிஎஸ்டி பற்றாக்குறையை சமாளிக்க கடன் வாங்கி நிதி அளிக்க வேண்டும் என்ற எதிா்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கோரிக்கையை மத்திய அரசு கடந்த வாரம் ஏற்றுக் கொண்டது.
அதன்படி, ரூ.1.1 லட்சம் கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டு பற்றாக்குறையை சமாளிக்க மாநிலங்களுக்காக மத்திய அரசு கடன் வாங்கவுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்தது. பின்னா் மாநிலங்களுக்கு தேவையான கடன் வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் மத்திய அரசின் சாா்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.