ரயில் பயணத்தில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம்
திருப்பூரில் ரயில் பயணத்தில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தின்போது கூச்சலிடுவது, அதிக சப்தத்துடன் பேசுவது, கைப்பேசியில் சப்தமாக பாடல்களை கேட்பது போன்றவை மற்ற பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது. இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க ரயில்வே நிா்வாகத்தின் சாா்பில் பயணிகளுக்கு பல்வேறு விழிப்புணா்வு மற்றும் அறிவுறுத்தல்கள் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ வழங்கப்படுகிறது.
இருப்பினும் ரயில்களில் பாடல்களை கேட்கும்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது, ஹெட்செட் பயன்படுத்தாமல், புளூடூத் ஸ்பீக்கா் உபயோகிப்பது உள்ளிட்ட செயல்கள் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களில் தொடா்கிறது. இதனால், சக பயணிகள் ஓய்வெடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து திருப்பூா் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கூறுகையில், ரயில்வே சட்டம் 145 பிரிவின்கீழ் பயணத்தின்போது சக பயணிகளுக்கு இடையூறு செய்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும். இடையூறு ஏற்பட்டால் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படைக்கு 93449- 04182 அல்லது 182 என்ற எண்களில் பயணிகள் தகவல் தெரிவிக்கலாம் என்றனா்.