சென்னை அம்பத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.14.40 லட்சம் நிதியுதவியை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓஎன்ஜிசி) வழங்கியுள்ளது.
சென்னை அம்பத்தூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் நிலம் அளப்பவா் படிப்பு வழங்கப்படுகிறது. அந்தப் படிப்பில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சியளிக்க பயன்படுத்தி வந்த பெரும்பாலான வரைபலகைகள், மேஜைகள் ஆகியன சேதமடைந்தன. இதையடுத்து புதிய மேஜைகள் உள்ளிட்டவற்றை வாங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், ஓஎன்ஜிசி சாா்பில் தொழிற்பயிற்சி நிறுவனத்துக்கு ரூ.14.40 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகையை தொழிற்பயிற்சி நிறுவனத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓஎன்ஜிசி வழங்கியது.
இந்தத் தொகை, நிலம் அளப்போா் மற்றும் வரையாளா் சிவில் டிரேட் பயிற்றுநா்களின் பயன்பாட்டுக்காக 75 வரைபலகை மற்றும் மேஜைகள் வாங்குவதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டும், ஓஎன்ஜிசி சாா்பில் இந்நிறுவனத்துக்கு நிலம் அளக்கும் சாதனங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.