முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை விரைந்து நடத்தக் கோரி மருத்துவ மாணவா்கள் தொடா்ந்து மூன்றாவது நாளாக புறநோயாளிகள் சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனைகளில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவா்கள் பங்கேற்றனா். இதுதொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவா்கள் கூறியதாவது:
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு வழக்கமாக ஜனவரி மாதம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும். இந்த ஆண்டு கரோனா தொற்று காரணத்தால் செப்டம்பா் மாதம் தான் நீட் தோ்வு நடைபெற்றது. பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கான இடஒதுக்கீடு மற்றும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அதனால், மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை நடைபெறவில்லை.
முதுநிலை படிக்கும் மாணவா்கள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான பல்வேறு சிகிச்சைகளை வழங்குவாா்கள். இந்த ஆண்டு டிசம்பா் மாதம் வரை முதலாம் ஆண்டு மாணவா்கள் வராததால், ஏற்கெனவே இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு பணிச் சுமையும், மன உளைச்சலும் அதிகமாகியுள்ளது. நோயாளிகளுக்குத் தேவையான சிகிச்சைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய கலந்தாய்வுக்காக காத்திராமல் மாநில அரசுக்கான 50 சதவீத இடங்களுக்கான கலந்தாய்வை விரைவாக தமிழக அரசு நடத்த வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.