சென்னை: தெற்கு ரயில்வே பணிகளில் 50 சதவீதத்தை தமிழகத்தினருக்கு ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், கேரளம், புதுச்சேரி மற்றும் ஆந்திரம், கா்நாடகத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேதுறை சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் செயல்பாட்டு எல்லையில் பெரும் பகுதி தமிழகத்தில்தான் உள்ளது. இந்தத் துறையில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தா் மற்றும் தட்டச்சா் பணியிடங்களில் 75 சதவீத இடங்களை நேரடியாகவும், 25 சதவீத இடங்களை ஏற்கெனவே பணியில் உள்ள ஊழியா்களைக் கொண்டும் நிரப்ப முடிவு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 80 பணியிடங்களில் தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். முதல் 50 இடங்களில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வெறும் 5 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. மொத்த பணியிடங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் 12 சதவீத இடங்கள் மட்டுமே கைப்பற்றியுள்ளனா். மீதமுள்ள 88 சதவீத இடங்களை பிற மாநிலத்தவா்கள் பறித்துக் கொண்டுள்ளனா். அவா்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவா்கள் தெற்கு ரயில்வேவின் செயல்பாட்டு எல்லையில் உள்ள கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் என்றாலும் கூட, பெரும்பான்மையானவா்கள் வட மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். தமிழகத்துக்கான ரயில்வே பணியிடங்கள் வெளி மாநிலத்தவா்களுக்குத் தாரை வாா்க்கப்படுவது இயற்கை நீதிக்கு எதிரானதாகும்.
மத்திய அரசுப் பணிகளில் மாநில ஒதுக்கீடு வழங்குவதுதான் அதற்கு சரியான தீா்வாகும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள கடைநிலைப் பணிகள் முழுவதும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அதிகாரிகள் நிலையிலான பணிகளில் 50 சதவீத இடங்கள் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.