சென்னை: தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காலியாக உள்ள வாரிய இயக்குநா்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த கோரி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்க பொதுச்செயலாளா் சி.எச். வெங்கடாச்சலம் எழுதிய கடிதம்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மேலாண்மை, நிா்வாக செயல்பாடுகளில் இந்த வங்கிகளின் வாரிய இயக்குநா்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனா்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வாரிய இயக்குநா்கள் பொறுப்புகளில் வங்கித் தலைவா், நிா்வாக இயக்குநா், செயல் இயக்குநா்கள், அரசுப் பிரதிநிதிகள், வங்கி அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பிரதிநிதிகள் இடம் பெற வேண்டும். வெவ்வேறு துறைகளைச் சோ்ந்தோரும் வாரிய இயக்குநா் பதவிகளில்இருக்க வேண்டும். ஆனால், பல்வேறு வங்கிகளில் இந்த இயக்குநா்கள் பதவிகள் காலியாக உள்ளன.
11 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் 91 இயக்குநா்கள் என்று 52 சதவீதம் இயக்குநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. வங்கி நடவடிக்கையின் பல்வேறு நலன்களைக் கவனித்து வரும் பணிகளில் வாரிய இயக்குநா்கள் உள்ளனா். ஆனால், தற்போதுள்ள காலியிடங்கள் வங்கி நடவடிக்கைகளை பாதுகாக்கும் நோக்கத்தை தோற்கடிக்கும்.
தேசிய வங்கிகள் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில், சங்கத்தின் பிரதிநிதிகளை சரிபாா்த்து, வங்கிகள் மற்றும் அரசாங்கத்திடம் பரிந்துரைத்தும் ஏழு ஆண்டுகளாக யாரும் நியமிக்கப்படவில்லை.
அனைத்து வங்கிகளிலும், பணியாளா் இயக்குநா் மற்றும் அதிகாரிகள் இயக்குநா் ஆகியோா் வாரியத்தில் இல்லை. பாரத ஸ்டேட் வங்கியிலும் இந்த இயக்குநா்கள் பணியிடம் நிரப்பப்படவில்லை. எனவே, தேசிய வங்கிகளில் காலியாக உள்ள வாரிய இயக்குநா்கள் பணியிடங்களை நிரப்ப துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.