திசைகாட்டிகள்!
தற்போதைய கல்வி முறையில் மதிப்பெண்களுக்கான வாசிப்புக்கே குழந்தைகள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.
தற்போதைய கல்வி முறையில் மதிப்பெண்களுக்கான வாசிப்புக்கே குழந்தைகள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு பாடத்தைத் தாண்டிய நூல்களை வாசிப்பதில் ஆர்வம் இருப்பதில்லை.
குழந்தைப் பருவத்தில், அவர்களுக்கான பயிற்சி எப்படி அமைகிறதோ, அதுவே இளைஞர்களாக வளரும்போதும் தொடர்கிறது.
ஒழுக்க நெறிகள், வாழ்வியல் சிந்தனைகளைப் பெறுகிற வாய்ப்பு குழந்தைகளுக்கு தற்போது மிகவும் குறைவு. புத்தகக் காட்சிக்கு கணவன், மனைவி இருவரும் தனியாகவே வருகின்றனர். மிகக் குறைந்த அளவிலான பெற்றோரே குழந்தைகளுடன் வருவதைக் காணமுடிகிறது. அத்தகைய சூழலில் வளர்ந்துள்ள தற்கால இளைஞர்கள், புத்தக வாசிப்பில் ஆர்வம் மிக்கவர்களாக இல்லையே என ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை.
பெற்றோர் தாங்கள் மேற்கொண்டுள்ள பணிகளில் காட்டும் முழுமையான ஈடுபாட்டை, பிள்ளைகளுக்கான வழிகாட்டலில் காட்டுவதில்லை. ஆகவே, வாசிப்பு போன்றவற்றில் பெற்றோர் வழிகாட்டல் இல்லாமல் வளரும் தலைமுறையால், சிந்தனை மிக்க நூல்களின் வாசிப்புக்கான பயிற்சியைப் பெற முடிவதில்லை. இளமையில் ஏற்படும் சிந்தனை மாற்றமே கடைசி வரை நமக்குள் இருக்கும்.
தற்போது தங்களின் கருத்துகளை பிறர் அறிய வேண்டும் என்ற ஆர்வமும் இளைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ளதால், படைப்பாளிகளின் எண்ணிக்கையும் பெருகியுள்ளது. ஆனால், கவிதையோ, கதையோ அதை எழுதுபவரின் அனுபவம் சார்ந்ததாகவே படைப்புகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட படைப்புகளையே வாசகர்கள் நினைவில் வைத்திருப்பர்.
வீடுகளிலும், பள்ளிகளிலும் வாசிப்பு பழக்கத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம். பாடத்துக்கு அப்பாற்பட்ட நல்ல நூல்களை வாசிக்கும் மாணவர்கள், அவை தொடர்பான தங்களது கருத்துகளை சக மாணவர்களிடம் பேசிக் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அப்போதுதான் நல்ல வாசிப்பாளர்களும், படைப்பாளர்களும் எதிர்காலத்தில் உருவாகும் நிலை ஏற்படும்.
-பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ்.