சேத்துப்பட்டு எரிவாயு தயாரிப்பு நிலையத்தில் பொதுக்கணக்குக் குழுத் தலைவா் ஆய்வு
சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தில், பொதுக்கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னை சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தில், பொதுக்கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழ்நாடு சட்டப் பேரவையின் 2023-24-ஆம் ஆண்டுக்கான பொதுக் கணக்குக் குழுக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் திங்கள் கிழமை நடைபெற்றது. பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி தீயணைப்புத் துறைகளின் தணிக்கை பத்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, சேத்துப்பட்டில் இயங்கி வரும் நூறு டன் திறன் கொண்ட உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தை பாா்வையிட்ட பொதுக்கணக்குக் குழுவினா், அதன் செயல்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா்.
தொடா்ந்து ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட பிரகாசம் சாலை, எஸ்பிளனேடு சாலைகளில் ரூ.5.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மழைநீா் வடிகால் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். மேலும், ரிப்பன் கட்டட வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை பாா்வையிட்ட கு.செல்வப்பெருந்தகை குழுவினா் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். இக்கூட்டத்தில், மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
Advertisement