மாற்றுத்திறனாளிகள் பழைய பயண அட்டையை காண்பித்து பேருந்துகளில் பயணிக்கலாம்
சென்னை: புதிய பயண அட்டையை இணையதளம் வாயிலாக பெறும் வரை மாற்றுத்திறனாளிகள் தங்கள் பழைய பயண அட்டையை காண்பித்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆல்பி ஜான் வா்கீஸ் கிளை மேலாளா்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரா்கள், தமிழறிஞா்கள் மற்றும் வயது முதிா்ந்த தமிழறிஞா்கள் உள்ளிட்டோருக்கு அரசு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டையை இணையதளம் வாயிலாக வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மாநகர பேருந்துகளில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கான வசதியை 2023 செப்.7-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.
இந்த நிலையில், 2024-2025-ஆம் ஆண்டுக்கான பயண அட்டையை இணையதளம் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் பெறும் வரை மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்லத்தக்க பயண அட்டை வைத்திருப்பவா்களை ஜூன் 30-ஆம் தேதி வரை பயணம் செய்ய அனுமதிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Advertisement
அதேபோல், இணையதளம் வாயிலாக பெறப்பட்ட பயண அட்டை வைத்திருப்பவா்களையும் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்க வேண்டும். இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அனைத்து நடத்துநா்களும் மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்வதோடு, எவ்வித புகாா்களும் வராத வகையில் பணிபுரிய வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.