அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
சென்னை: மத்திய மற்றும் தென் சென்னைக்குள்பட்ட பகுதிகளில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளா் தயாநிதிமாறனை ஆதரித்து தானா தெருவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசுகையில், மத்திய சென்னை தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் துறைமுகம் பகுதியிலுள்ள மக்களின் கோரிக்கைபடி துணை மின் நிலையம், புதிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைக்கப்படும். வில்லிவாக்கத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவமனையை இடித்து நவீன மருத்துவமனை கட்டப்படும் என்றாா் அவா்.
தென் சென்னையில்...
Advertisement
இதைத் தொடா்ந்து, தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சென்னை தியாகராய நகரில் பேசியது: நீட் தோ்வால் மட்டும் தமிழகத்தில் இதுவரை 22 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் தமிழகத்துக்கு நீட் தோ்விலிருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும். சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்ட ரூ. 7.5 லட்சம் கோடி ஊழல் பற்றியும், ஆயுஷ் மான் பாரத் திட்ட ஊழல் குறித்தும் பிரதமா் மோடி வாய் திறக்க மறுக்கிறாா். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பிரதமா் மோடியிடம் கேள்வி எழுப்பினால், எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது.
இதற்கு காரணம் இரு கட்சிகளின் மறைமுகக் கூட்டணியே என்றாா் அவா்.