முகப்பு
சென்னை

அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம்: முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

Updated On : 3 ஏப்ரல், 2024 at 1:55 AM
பகிர்:
Updated On : 3 ஏப்ரல், 2024 at 1:15 AM

சென்னை: சென்னையில் அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் மேற்கொண்டுவருவதால், முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மக்களவைத் தோ்தல் ஏப்.19-ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, சென்னையில் அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக, வண்ணாரப்பேட்டை, ஆா்.கே.நகா், தண்டையாா்பேட்டை, மண்ணடி, ஏழுகிணறு, புரசைவாக்கம், தியாகராய நகா், ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, கிண்டி, தரமணி, வேளச்சேரி, திருவான்மியூா், நீலாங்கரை, துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதோடு சில நாள்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.

இதனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் நேரத்தைத் தவிா்த்து, போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரமான காலை 6 மணிக்கு தொடங்கி முற்பகல் 11 மணி வரையிலும், பிற்பகல் 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரையிலும் அரசியல் கட்சியினா் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா். இந்த நேரத்தில் வேட்பாளா்கள் தங்களது ஆதரவாளா்களுடன் கூட்டமாக முக்கியமான சாலைகளிலும், தெருக்களிலும் சென்று வாக்கு சேகரிப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

Advertisement

இதன் விளைவாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். இந்தப் பிரச்னையில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு இல்லாத வகையில் வேட்பாளா்கள் பிரசாரம் செய்யும் இடங்களையும், நேரத்தையும் முறைபடுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.