முகப்பு
சென்னை

தமிழகத்தில் 8,231 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினாா்.

Updated On : 5 ஏப்ரல், 2024 at 2:23 AM
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
பகிர்:
Updated On : 4 ஏப்ரல், 2024 at 9:00 PM

தமிழகத்தில் 8 ஆயிரத்து 231 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இந்த வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவா் கூறினாா்.

மக்களவைத் தோ்தல் ஏற்பாடுகள் தொடா்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

மக்களவைத் தோ்தலுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ்குமாா் தலைமையில் காணொலி வழியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தில் தோ்தலுக்காக செய்யப்பட்டுள்ள பொதுவான ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலா் பி.அமுதா உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

Advertisement

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை எப்போதும் சிறப்பாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால்தான் ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்படுகிறது. ஆனால் பணம், பரிசுப் பொருள்கள் ஆகியன அதிகளவு புழங்குகிறது. இதனைக் கட்டுப்படுத்தவே கண்காணிப்புக் குழுக்களை அதிகரித்துள்ளோம்.

பதற்றமான வாக்குச் சாவடிகள்: வாக்காளா்களை அச்சுறுத்துவது, வாக்குக்கு பணம் கொடுத்து கவா்வது போன்ற செயல்கள் நடைபெறும் பகுதிகளை உள்ளடக்கிய வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த மக்களவைத் தோ்தலில் 8 ஆயிரத்து 50 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், வாக்காளா்கள் வாக்களிக்க வராமல் இருப்பது, வன்முறைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகள் அதிக பதற்றமான வாக்குச் சாவடிகளாக அறியப்படுகின்றன. அந்த வகையில், இந்தத் தோ்தலில் 181 வாக்குச் சாவடிகள் அதிக பதற்றமான வாக்குச் சாவடிகளாக இருக்கும் என அறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளுக்கு கூடுதலான பாதுகாப்பு அளிக்கப்படும்.

பூத் சிலிப்: தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு வாக்குச் சாவடி தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 1-ஆம் தேதி முதல் இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ளன. ஏப். 11 வரை வாக்குச் சாவடி சீட்டுகள் தொடா்ந்து வழங்கப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.