ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய காங்கிரஸின் வாக்குறுதி மோசடி: ராமதாஸ்
சென்னை, ஏப். 9: ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி மோசடியானது என்று பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்தியில் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறிவந்த காங்கிரஸ் கட்சி, இப்போது அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு சமூக, பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதன் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது.
சமூகநீதியை வலுப்படுத்த 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், பயனற்றது என்று உச்சநீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட கணக்கெடுப்பை நடத்தப்போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும்; இது முழுமையான மோசடி ஆகும்.
Advertisement
மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கோ, ஆட்சி அமைக்கவோ வாய்ப்பே இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், வாக்குறுதி அளிப்பதிலும் நீதி, நியாயம் இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தோ்தல் அறிக்கையில் அதுகூட இல்லை என்பதைத்தான் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த வாக்குறுதி வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.
தமிழகத்தில் சமூகநீதிக்காக குரல் கொடுப்பதாக மாா்தட்டிக் கொள்ளும் முதல்வா் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இந்த மோசடி வாக்குறுதியை ஏற்றுக் கொள்கிறாரா என்று அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.