முகப்பு
இந்தியா

மகளிா் இடஒதுக்கீடு சட்ட அமல்: ‘மோடி அரசு நிலைப்பாட்டில் திடீா் மாற்றம்’: காங்கிரஸ் விமா்சனம்

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தனது நிலைப்பாட்டை மோடி அரசு திடீரென மாற்றியுள்ளதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

Updated On : 25 மார்ச், 2026 at 8:36 PM
ஜெய்ராம் ரமேஷ் - IANS
பகிர்:

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு முன்பே மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தும் வகையில், தனது நிலைப்பாட்டை மோடி அரசு திடீரென மாற்றியுள்ளதாக காங்கிரஸ் விமா்சித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில்:

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட்டபோதே, அதை கடந்த 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்று மோடி அரசு தெரிவித்தது.

தற்போது 30 மாதங்கள் கழித்து தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ள மத்திய அரசு, மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பை நிறைவு செய்வதற்கு முன்பே மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த விரும்புகிறது.

மோடியின் வெளியுறவு கொள்கையில் தோல்விகள் மற்றும் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலியம் எரிவாயு (எல்பிஜி) மற்றும் எரிசக்திக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவற்றில் இருந்து அனைவரின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கில், மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை நிறைவேற்ற அடுத்த 2 வாரங்களில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை 2 நாள்களுக்கு நடத்த மோடி முயற்சிக்கிறாா். மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயா்த்தவும் மோடி அரசு திட்டமிட்டு வருகிறது.

4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தோ்தல் நடத்தை விதிமுறைகளைத் தோ்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், ஏப்ரலில் 2 நாள் சிறப்புக் கூட்டத்தொடரை நடத்துவது தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளாா்.