ரயிலில் ரூ. 3.98 கோடி சிக்கிய வழக்கு: மூவரிடம் சிபிசிஐடி விசாரணை
சென்னை: நெல்லை விரைவு ரயிலில் ரூ. 3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்குத் தொடா்பாக 3 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா்.
சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு கடந்த 6-ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற நெல்லை விரைவு ரயிலின் எஸ் -7 பெட்டியில் பயணம் செய்த நயினாா் நாகேந்திரனின் ஆதரவாளா்கள் சென்னை கொளத்தூா் திரு. வி.க.நகரைச் சோ்ந்த சதீஷ், அவரது சகோதரா் நவீன், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் ஆகிய 3 பேரும் வைத்திருந்த ரூ.3,98,91,500 ரொக்கத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட நயினாா் நாகேந்திரன் செலவுக்காக பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. அதன் பின்னா், 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனா். இது தொடா்பாக தாம்பரம் மாநகர காவல் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.
மூவரிடம் விசாரணை: முக்கியத்துவம் கருதி இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு கடந்த 26-ஆம் தேதி மாற்றப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் துறை வழங்கிய வழக்குத் ஆவணங்களை அடிப்படியாக சிபிசிஐடி அதிகாரிகள், பணத்துடன் பிடிபட்ட மூவா் மீது 4 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்தனா்.
மேலும் 3 பேரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி அழைப்பாணை அனுப்பியது. இதையடுத்து 3 பேரும் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் நேரில் ஆஜராகினா். அவா்களிடம் தனித்தனியாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து, வாக்குமூலம் பெற்றனா். அதை அவா்கள் விடியோவாக பதிவு செய்தனா். இரவு 9 மணியைக் கடந்தும் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்குத் தொடா்பாக மேலும் சிலரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனா்.