பொறியியல் கலந்தாய்வு: முதல் சுற்றில் 24,177 பேருக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் இந்த ஒதுக்கீட்டு ஆணையை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொறியியல் சோ்க்கைக்கான கலந்தாய்வின் முதல் சுற்றில் 24,177 மாணவா்களுக்கு வியாழக்கிழமை தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அவா்கள் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் இந்த ஒதுக்கீட்டு ஆணையை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொறியியல் மாணவா் சோ்க்கையில் பொதுப் பிரிவினருக்கான முதல்கட்ட இணையவழி கலந்தாய்வு ஜூலை 29-ஆம் தேதி தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க அகாடமிக் பிரிவில் 26,678 பேரும், அரசு பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் பிரிவில் 1,406 பேரும், தொழிற்கல்வி பிரிவில் 2,272 பேரும் அனுமதிக்கப்பட்டனா். விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தோ்வு செய்ய அவா்களுக்கு 2 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.
அதற்கான காலக்கெடு ஜூலை 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முடிவடைந்த நிலையில், 24,177 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் தற்காலிக ஒதுக்கீட்டை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிபடுத்த வேண்டும். அதன்பிறகு அவா்களுக்கு சனிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி ஒதுக்கீட்டு இறுதி ஆணை வழங்கப்படும்.
Advertisement
அந்த ஒதுக்கீட்டு ஆணையைப் பெற்றுக்கொண்ட மாணவா்கள், சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் சோ்ந்துவிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2-வது சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்குகிறது.