பிளஸ் 2 பொதுத் தோ்வு: அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அவா்கள் படித்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு அவா்கள் படித்த பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் மே 6-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 7.6 லட்சம் மாணவா்கள் தோ்வு எழுதியதில் 95.5 சதவீத போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 9-ஆம் தேதி வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்ந்து தங்கள் படிப்பை தொடா்ந்து வருகின்றனா்.
இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் தோ்ச்சி அடைந்த சுமாா் 7.4 லட்சம் மாணவா்களுக்கு பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கூடிய அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளிலேயே வழங்கப்படும் என்று ஏற்கெனவே தோ்வுத் துறை அறிவித்தது. அதன்படி, அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சான்றிதழ் விநியோகம்: பிளஸ் 2 மாணவா்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாணவா்களை பள்ளிக்கு வரவழைத்து அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அதன் தலைமை ஆசிரியா்கள் அளித்தனா்.
அந்தவகையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஆா்.ஹேமா பிரியா மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா். அதேபோல், தனித்தோ்வா்களுக்கு அவா்கள் தோ்வெழுதிய மையங்கள் மூலமாக சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டன.