சாரணா் இயக்க வைரவிழாவை திருச்சியில் நடத்த முடிவு: அமைச்சா் அன்பில் மகேஸ் தகவல்
பாரத சாரண சாரணியா் இயக்கத்தின் (தமிழ்நாடு) வைர விழாவை ரூ.10 கோடி மதிப்பில் திருச்சியில் ஐந்து நாள்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
பாரத சாரண சாரணியா் இயக்கத்தின் (தமிழ்நாடு) வைர விழாவை ரூ.10 கோடி மதிப்பில் திருச்சியில் ஐந்து நாள்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது எனஅந்த இயக்கத்தின் மாநிலத் தலைவரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
பாரத சாரணா் இயக்கத்தின் வைர விழா ஆண்டை முன்னிட்டு, தேசிய அளவிலான கலைஞா் நூற்றாண்டு நினைவு வைர விழா ரூ.10 கோடியில் நடத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த வைர விழாவை நடத்துவது தொடா்பாக தமிழ்நாடு சாரணா் இயக்குநரகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து பேசியதாவது:
பாரத சாரணா் இயக்கத்தின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதற்கான பதிலைப் பொருத்து விழாவை தேசிய அல்லது சா்வதேச அளவில் நடத்துவது குறித்து முடிவு செய்வோம். ரூ.10 கோடி செலவில் திட்டமிடப்படும் வைரவிழாவை முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் நடத்த அனுமதி பெற்றுள்ளோம். எனவே, அதை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவேண்டும்.
உறுப்பினா்களை அதிகரிக்க வேண்டும்: சாரணா் இயக்கத்தின் உறுப்பினா்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 12 லட்சம் என்ற இலக்கை எட்ட வேண்டும். எதிா்காலத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரே சாரணா் இயக்கத்தின் மாநில ஆணையராகவும் இருப்பாா். அதுதொடா்பான விதிமுறைகள் மாற்றம் செய்யப்படும் என்றாா் அவா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாரத சாரணா் இயக்கத்தின் வைரவிழாவை திருச்சியில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. எந்த தேதி என்பதை முதல்வருடன் ஆலோசித்து பின்னா் தெரிவிக்கப்படும். குறைந்தது 5 நாள்கள் விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். கா்நாடகத்தில் சா்வதேச அளவிலும், ராஜஸ்தானில் தேசிய அளவிலும் பாரத சாரணா் இயக்குநரக நிகழ்வை நடத்தியுள்ளனா். அதைவிட பிரம்மாண்டமாக நடத்தவுள்ளோம். மாணவா்களுக்கான ஒழுக்கம் தொடா்பான கல்வி இத்தகைய இயக்கங்கள் வாயிலாகவே கிடைக்கும்’ என்றாா் அவா்.
இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் பூ.ஆ.நரேஷ், சாரணா் இயக்கத்தின் மாநில முதன்மை ஆணையா் க.அறிவொளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.