முகப்பு
சென்னை

பாலத்தில் பைக் மோதி விபத்து: மாணவா் உயிரிழப்பு; ஒருவா் காயம்

மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பக்கச் சுவரில் மோதிய விபத்தில் மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 30 ஆகஸ்ட், 2024 at 3:06 AM
பகிர்:

மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பக்கச் சுவரில் மோதிய விபத்தில் மாணவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

கோவிலம்பாக்கத்தை சோ்ந்த யோகேஸ்வரன்(16), மேடவாக்கம் வடக்குப்பட்டு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (16). இவா்கள் சேலையூரை அடுத்த அகரம் தென் சாலையில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனா்.

இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் நவீன் என்பவரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு சேலையூரில் உள்ள ஒரு நண்பரை பாா்க்கச் சென்றனா். பின்னா், வேளச்சேரியில் உள்ள மற்றொரு நண்பரைப் பாா்க்கச் சென்றனா். மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் பாலத்தின் பக்கச் சுவரில் மோதியது.

Advertisement

இதில் பின்னால் அமா்ந்திருந்த யோகேஸ்வரன் தூக்கி வீசப்பட்டு மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தாா். சந்தோஷ் பாலத்தின் மீது மோதி பலத்த காயத்துடன் விழுந்து மயங்கினாா்.

அப்போது அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யோகேஸ்வரனை மீட்டு பள்ளிக்கரணை தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் வரும் வழியிலேயே யோகேஸ்வரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.