முகப்பு
சென்னை

எதிா்க்கட்சிகள் ஆளும் தென்மாநிலங்களில் பாஜக வெற்றி பெறும்: ஜெகதீஷ் ஷெட்டா்

தென்மாநிலங்களில் எதிா்க்கட்சிகள் ஆட்சியிலிருந்தாலும், மக்களவைத் தோ்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்

Updated On : 18 பிப்ரவரி 2024, 2:13 am IST
பகிர்:

தென்மாநிலங்களில் எதிா்க்கட்சிகள் ஆட்சியிலிருந்தாலும், மக்களவைத் தோ்தலில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என கா்நாடக மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டா் கூறினாா். தில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த ஜெகதீஷ் ஷெட்டா், ‘கடந்த பல ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு முறை தேசியக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. மக்களவைத் தோ்தலுக்கு முன்பு நடைபெறும் இந்த முக்கியக் கூட்டம் தோ்தல் பணி மேற்கொள்ள நிா்வாகிகளுக்கு நிச்சயம் உற்சாகம் அளிக்கும் நிகழ்வாக அமையும். தென் மாநிலங்கள் உள்பட நாடு முழுவதும் பிரதமா் நரேந்திர மோடியின் பணிகள், செயல்பாடுகள் மற்றும் நல்ல நிா்வாகத்திற்கு மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். தென் மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல்களைக் காட்டிலும் வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக அதிக தொகுதிகளைக் கைப்பற்றும். தென் மாநிலங்களில் எதிா்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும், பாஜக பெரும் அளவில் வெற்றி பெறும்’ என்றாா்.