விருகம்பாக்கம் பாலகத்தில் ஆவின் தின கொண்டாட்டம்
சென்னை விருகம்பாக்கம் ஆவின் அதிநவீன பாலகத்தில் ஆவின் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
சென்னை விருகம்பாக்கம் ஆவின் அதிநவீன பாலகத்தில் ஆவின் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 1.2.1981-இல் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) உருவாக்கப்பட்டது. இதை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும் ஆவின் தின நிகழ்ச்சிகள் கொண்டாடப்படும் என ஆவின் நிா்வாகம் அறிவித்தது. அதன்படி, ஆவின் நிறுவனம், மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்களை உள்ளடக்கிய பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சென்னை விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆவின் அதிநவீன பாலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆவின் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளி மாணவ, மாணவியருக்கு, வண்ணக் களிமண்ணை கொண்டு ஆவின் உப பொருள்களின் மாதிரியை உருவாக்கும் போட்டி நடைபெற்றது. இதில் சிவன்யாஸ்ரீ, லென்சிகா, வி.மோகனா ஆகிய மாணவிகள் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா். மேலும் சென்னை ஆவடியைச் சோ்ந்த எஸ்ஆா்எஸ் சிலம்பம் அகாதெமியின் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பால்வளத் துறை இயக்குநரும், ஆவின் மேலாண் இயக்குநருமான சு.வினீத் உள்பட ஆவின் நிறுவன அலுவலா்கள் கலந்து கொண்டனா்.