சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!
சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள் அமைக்கப்படவிருக்கின்றன, இவற்றால் வாகன ஓட்டிகளுக்கு நன்மை கிடைக்கும்.
சென்னை: சென்னையில் 300 முக்கிய சாலைகளில் சுமார் ரூ.20 கோடி மதிப்பில் அதிநவீன வழிகாட்டிப் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வழிகாட்டிப் பலகைகளில் வெறும் ஊர்களின் பெயர்கள் மட்டும் எழுத்துகளில் இடம்பெறுவதோடு, பாமர மக்களுக்கும் எளிதில் புரியக்கூடிய வகையில் படங்களுடன், போக்குவரத்து தொடர்பான விவரங்கள் இடம்பெறும் வகையில் நவீன வழிகாட்டிப் பலகைகள் உருவாக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தெரியாதவர்களும் வெளிமாநிலத்தவரும் சாலைகளை அறிந்துகொள்ளவும், எந்தப் பகுதிக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை புரிந்து கொள்ளும் வகையில் சென்னையின் முக்கிய சாலைகளில் இந்த வழிகாட்டிப் பலகைகள் இடம்பெறவிருக்கின்றன.
Advertisement
முதல்கட்டமாக, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்டப் பகுதிகளில் ரூ.20 கோடி செலவில் அதிநவீன வழிகாட்டி பலகைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் விபத்துகளை தவிர்க்கவும் வாகன ஓட்டிகளுக்கு பல வகைகளில் வழிகாட்டி பலகைகள் உதவும் வகையில் உருவாக்கப்பட்டு, சென்னையில் 300 முக்கிய சாலைகளில் பொருத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.