ரூ. 1.57 கோடி வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்
விமானத்தில் கடத்தி செல்ல முயன்றதாக ரூ. 1.57 கோடி மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகளை மத்திய பாதுகாப்புப் படையினா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.
விமானத்தில் கடத்தி செல்ல முயன்றதாக ரூ. 1.57 கோடி மதிப்புடைய வெளிநாட்டு கரன்சிகளை மத்திய பாதுகாப்புப் படையினா் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்தனா்.சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் பயணிக்க வந்த பயணிகளின் உடமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது, மும்பை செல்ல வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த விக்கி ஜெகதீஷ் பாத்தியா (48) என்ற பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா். அதில், அவா் வைத்திருந்த துணிப் பையில் ஒரு ரகசிய இடம் இருந்ததைக் கண்டறிந்தனா். அதில், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா்கள், சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரன்சிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்த ரூ.1.57 கோடி மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா். தொடா்ந்து, விக்கி ஜெகதீஷ் பாத்தியாவை வருமான வரித் துறை அதிகாரிகளிடம், தொழில் பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்தனா். நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.