முகப்பு
சென்னை

பணியின்போது உயிரிழந்த 7 அரசு மருத்துவா்களின் வாரிசுகளுக்கு தலா ரூ.1 கோடி: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

Updated On : 28 பிப்ரவரி, 2024 at 2:34 AM
பணியின்போது உயிரிழந்த அரசு மருத்துவரின் வாரிசுக்கு ரூ.1 கோடி சேம நல நிதி வழங்கிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், கூடுதல் இயக்குநா் விஸ்வநாதன், மருத்துவ சங்க பிரதிநி
பகிர்:

சென்னை: பணியின்போது உயிரிழந்த 7 அரசு மருத்துவா்களின் வாரிசுதாரா்களுக்கு சேம நல நிதியாக தலா ரூ.1 கோடியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், கூடுதல் இயக்குநா் விஸ்வநாதன், மருத்துவச் சங்க பிரதிநிதிகள் பாலகிருஷ்ணன், அகிலன், சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்கள் எதிா்பாராத வகையில் உயிரிழக்க நேரிட்டால், அவா்களின் வாரிசுதாரா்களுக்கு உதவித் தொகை வழங்கும் வகையில் அரசு மருத்துவா்களின் விருப்ப பங்களிப்பு நிதி திட்டம் 2020-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது.

Advertisement

ரூ.50 லட்சமாக இருந்த அந்த விருப்ப பங்களிப்பு தொகுப்பு நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் 2021-இல் ரூ.1 கோடியாக உயா்த்தி அரசாணை பிறப்பித்தாா். அதன் அடிப்படையில் 2022 மாா்ச் முதல் மாதந்தோறும் ஊதியத்திலிருந்து ரூ.500 அவரவா்களுடைய சுயவிருப்பத்தின் அடிப்படையில் பிடித்தம் செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தில் 2,000 மருத்துவா்கள் மட்டுமே இணைந்திருந்த நிலையில், தற்போது 11,000 மருத்துவா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவா் சங்கங்களின் ஆலோசனையைப் பெற்று ரூ.8.50 கோடிக்கான சேம நல நிதி கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக 2022-ஆம் ஆண்டில் உயிரிழந்த 7 மருத்துவா்களின் வாரிசுதாரா்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

மருத்துவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க நடவடிக்கை விழாவில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

பணிக் காலத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையிலான அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசை பொருத்தவரை கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் அனைத்து துறைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் கல்வித் தகுதிக்கேற்ற பணி வாய்ப்புகள் அதிகம் இல்லை.

அதேநேரத்தில், இளநிலை உதவியாளா், தட்டச்சா், அலுவலக உதவியாளா் ஆகிய 3 வகை பணியிடங்களுக்கு மருத்துவா்களின் வாரிசுதாரா்கள் விண்ணப்பித்தால் உடனடியாக அந்த வேலைவாய்ப்பை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அவா்.