அரசு மருத்துவா்களின் ஊதிய உயா்வு: 6 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவு
அரசு மருத்துவா்களின் ஊதிய உயா்வு குறித்து இன்னும் 6 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசு மருத்துவா்களுக்கு இணையான ஊதியத்தை தங்களுக்கும் வழங்க வேண்டும் என அரசு மருத்துவா்கள், தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குழு, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிக்கையை சமா்ப்பித்தது. இந்த நிலையில், ஊதிய உயா்வு வழங்குவது தொடா்பாக 2009-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தக் கோரி, மருத்துவா்கள் சங்கம் சாா்பில் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.அதுநிறைவேற்றப்படாத நிலையில் இந்த மனுவை பரிசீலிக்கக் கோரி அரசு மருத்துவா் ஜெயக்குமாா், சென்னை உய நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி ஆா்.என்.மஞ்சுளா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், குழு அளித்த பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியபோது, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், அதனை செயல்படுத்த முடியவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அரசு மருத்துவா்களின் கோரிக்கை மனுவை இன்னும் ஆறு வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.