நொய்டா கலவரம்: குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திய உ.பி. அரசு!
உ.பி.யில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா - காசியாபாத் பகுதியின் பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஊதிய திருத்தக் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தினர்.
1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பெரும் குழுக்களாகக் கூடி பல இடங்களில் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் நொய்டாவின் ஃபேஸ்-2 மற்றும் செக்டர் 60 போன்ற பகுதிகளில் நேற்று கலவரமாக மாறியது. சில பகுதிகளில் மிகவும் மோசமடைந்து கல் எறிதல், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல் மற்றும் தீவைப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றன.
Advertisement
இதில் ஒரு வாகனம் எரிக்கப்பட்டது. பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனால், அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ”ஊதிய உயர்வு வழங்க உயர்நிலை அதிகாரக் குழு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் நேற்று இரவு ஒப்புதல் அளித்துள்ளார்" என கௌதம் புத்த நகர் மாவட்ட ஆட்சியர் மேதா ரூபம் தெரிவித்தார்.
இதன்படி, கௌதம் புத்த நகர் மற்றும் காசியாபாத் பகுதியில் உள்ள திறனற்ற தொழிலாளர்கள் ஊதியம் முன்பு ரூ.11313 ஆக இருந்ததை ரூ.13,690 ஆகவும், ஓரளவு திறனுள்ள தொழிலாளர்கள் ஊதியம் ரூ.15,059 ஆகவும், திறனுள்ள தொழிலாளர்கள் ஊதியம் ரூ.16,868 ஆகவும் உயர்த்திப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் திருத்தப்பட்ட மாத ஊதியமானது திறனற்ற தொழிலாளர்களுக்கு ரூ.13,006, ஓரளவு திறனுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.14,306 மற்றும் திறனுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.16,025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மாவட்டங்களில், திறனற்ற தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.12,356, ஓரளவு திறனுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.13,591 மற்றும் திறனுள்ள தொழிலாளர்களுக்கு ரூ.15,224 ஊதியமாக வழங்கப்படவுள்ளது.