புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!
புதிய ஊரக வேலைத் திட்டத்தில் மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றி...
புதிய ஊரக வேலைத் திட்டத்தில் (விபி-ஜி ராம் ஜி) மாநிலம் வாரியாக ஊதிய விவரம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 125 நாள்கள் வேலை வழங்குவதற்கான விபி-ஜி ராம் ஜி எனும் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 1) முதல் அமல்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் எனும் 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக ‘வளா்ச்சியடைந்த பாரதம்- ஊரக வேலை மற்றும் வாழ்வாதார திட்டம்’ (விபி -ஜி ராம் ஜி) எனும் திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ளது.
Advertisement
Advertisement
2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய பயணத்தில், கிராமப்புற மேம்பாட்டு கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விபி-ஜி ராம் ஜி சட்டம் ஜூலை 1-ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
100 நாள்கள் வேலை இந்தப் புதிய சட்டத்தின் கீழ் தற்போது 125 நாள்களாக உயர்த்தப்பட்டு, இத்திட்டத்துக்காக 2026-27 நிதியாண்டில் ரூ 95,692.31 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலங்களின் பங்கையும் சோ்த்தால் மொத்தத் திட்ட மதிப்பு ரூ 1.51 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஊரக வேலைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு ரிசா்வ் வங்கியில் புதிய கணக்கைத் தொடங்கி உள்ளது. இந்தத் திட்டத்துக்காக தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.7,957.57 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், மாநில வாரியாக புதிய ஊரக வேலைத் திட்டத்தில் வழங்கப்படவுள்ள ஊதிய விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியிருகின்றன. அரசு அறிவிப்பின்படி, ஊதிய உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. எந்தவொரு மாநிலத்திலும் தினக்கூலி ரூ.300-க்குக் குறைவாக இருக்காத வகையில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.
உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், அசாம், அருணாச்சல பிரதேசம் மற்றும் ஹிமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊதிய விகிதங்கள் 15 முதல் 25 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.