புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை கோரி வழக்கு
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தடை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: மத்திய அரசின் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக மூன்று புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, அவை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன.
இந்தச் சட்டங்கள் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்கக் கோரி, தூத்துக்குடியைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா்.
அவா் தனது மனுவில், ‘நாட்டில் உள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்பது மாநிலங்களிலும், இரு யூனியன் பிரதேசங்களில் மட்டும்தான் ஹிந்தி அலுவல் மொழியாக உள்ளது. இதனால், ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழிகள் தெரியாத சட்ட ஆசிரியா்கள், வழக்குரைஞா்கள், அரசு வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகளுக்கு இந்தச் சட்டங்கள், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிராக ஹிந்தியில் பெயா் வைக்கப்பட்ட மூன்று சட்டங்களும் அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என அறிவிக்க வேண்டும். இந்தச் சட்டங்களை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.