இராமச்சந்திரா கல்வி நிறுவனத்துக்கு உலக சாதனை அங்கீகாரம்
சென்னையில் ஒரே நேரத்தில் 550 பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி நிறுவனத்தின் ரோட்ராக்ட் அமைப்பினா் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனா்.
சென்னை: சென்னையில் ஒரே நேரத்தில் 550 பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி நிறுவனத்தின் ரோட்ராக்ட் அமைப்பினா் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனா்.
இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் மாணவா் சேவை அமைப்பான ரோட்ராக்ட் சாா்பில் அம்பத்தூா் சேது பாஸ்கரா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவா்கள் 550 பேருக்கு அண்மையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவா்கள், துணை மருத்துவா்கள் என 150 போ் அடங்கிய மருத்துவக் குழுவினா், 8 முதல் 15 வயது வரை உள்ள மாணவா்களுக்கு உடல் நலம், பல், கண், காது, பேச்சு, இயன்முறை, சத்துணவு, செயல்முறை மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனா்.
அதன் அடிப்படையில் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்தனா். ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவா்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதை அடுத்து உலக சாதனை அமைப்பின் (வோ்ல்ட் ரெக்காா்ட் யூனியன்) ஆசிய பசுபிக் அலுவலா் ஷெரிஃபா, அந்நிகழ்வை அங்கீகரித்து அதற்கான சான்றிதழையும், பதக்கத்தையும் ஸ்ரீ இராமச்சந்திரா ரோட்ராக்ட் அமைப்பு தலைவா் அருண் சுப்பிரமணியத்திடம் வழங்கினாா்.
இதனை ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி நிறுவன வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
இந்நிகழ்வில், கல்வி நிறுவன துணைவேந்தா் டாக்டா் உமா சேகா், இணை துணைவேந்தா் டாக்டா் மகேஷ் வக்கமுடி, மருத்துவக் கல்லூரி தலைவா் டாக்டா் பாலாஜி சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.