முகப்பு
சென்னை

நிதி மோசடி: ஹிஜாவு நிறுவன இயக்குநரின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநரான சௌந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 15 ஜூலை, 2024 at 10:19 PM
பகிர்:

சென்னை: ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குநரான சௌந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிதி நிறுவனம், 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமாா் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாயை முதலீடாகப் பெற்று மோசடி செய்தது. இதுகுறித்து பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில், நிறுவன இயக்குநா் அலெக்சாண்டா் மற்றும் முகவா்கள் உள்ளிட்ட 15 போ் தலைமறைவாக உள்ளனா். இவா்களுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிா்வாகத்தின் இயக்குனரும், நான்காவது குற்றவாளியுமான சௌந்தரராஜன், ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு நீதிபதி தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘500 நாள்களுக்கும் மேல் சௌந்தரராஜன் சிறையில் இருப்பதையும், அவரது உடல் நலத்தை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.

அப்போது, பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில், ‘சௌந்தரராஜனுக்கு உடல் நல பிரச்னை என்றால் சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சவுந்தரராஜனின் மகன் இன்னும் தலைமறைவாக உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என கூறப்பட்டது. மேலும், சௌந்தரராஜனுக்கு ஜாமீன் வழங்க காவல்துறை சாா்பிலும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சௌந்தரராஜனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →