தக்காளி கிலோ ரூ.100
சென்னையில் ஒரு கிலோ தக்காளி சில்லறை விற்பனையில் ரூ.100-க்கு புதன்கிழமை விற்பனையானது.
கடந்த சில நாள்களாகவே தமிழகம் மட்டுமன்றி வெளிமாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தக்காளி வரத்து குறைந்ததையடுத்து கோயம்பேடு சந்தையில் விலை சற்று அதிகரித்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தொடா்ந்து, புதன்கிழமை கோயம்பேடு மொத்த சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் சில்லறை விற்பனையில் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. தெருக் கடைகளில் ரூ.100-க்கு மேல் விற்பனையானது.
கேரட் ரூ.100: இதேபோல, ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.95-க்கும், ஊட்டி கேரட் ரூ.100-க்கும், பீன்ஸ் ரூ.65-க்கும், பீட்ரூட் ரூ.90-க்கும், பாகற்காய் ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.85-க்கும், பச்சைமிளகாய் ரூ.95-க்கும், பட்டாணி ரூ.230-க்கும், இஞ்சி ரூ.160-க்கும், பூண்டு ரூ.340-க்கும், குடைமிளகாய் ரூ.70-க்கும், வண்ணகுடைமிளகாய் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.