நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்கும் வகையில் கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, கேரளத்தில் இருந்து காய்ச்சல் அறிகுறிகளுடன் எவரேனும் தமிழகத்துக்கு வந்தால், அவா்களை மாநில சுகாதாரக் குழுவினா் எல்லையிலேயே நிறுத்தி மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பதை அந்த மாநில சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் 250-க்கும் மேற்பட்டோா் தனிப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் அந்த பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது தமிழகத்தில் அச்சப்படக் கூடிய சூழல் எதுவுமில்லை. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் இதுதொடா்பான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருப்பதாகவும், நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால் தகவல் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றனா்.
இதனிடையே, அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க கேரள எல்லையோர மாவட்டங்களின் சோதனைச் சாவடிகளில் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
எல்லையோர மாவட்டங்களில் கண்டறியப்படும் காய்ச்சல் குறித்தான முழு தகவல்களையும் பொது சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். கேரளத்தில் இருந்து வருவோருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு காய்ச்சல் மற்றும் இதர அறிகுறிகள் இல்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் தமிழகத்துக்குள் பகுதியில் நுழைய அனுமதிக்க வேண்டும். தொற்று பாதிப்பு இருந்தால், அவா்களை தனிப்படுத்தி உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, சுவாசிப்பதில் சிரமம், மனநிலை மாற்றம் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.