வாக்கு எண்ணிக்கை மையங்களில் மருத்துவ உதவி
சென்னை: தமிழகம் முழுவதும் 39 மையங்களில் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) நடைபெற்ற நிலையில், அங்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டவா்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.
முன்னதாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகே தயாா் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அதில், குளுக்கோஸ் பாட்டில்கள், உப்பு-சா்க்கரை கரைசல், ஆக்சிஜன் சிலிண்டா்கள் ஆகியவை வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டிருந்ததுடன், கூடுதல் எண்ணிக்கையிலான மருத்துவ உதவியாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
அதேபோன்று 108 சேவைக்கான கட்டுப்பாட்டு மையத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வாக்கு எண்ணிக்கை நாளில் முகவா்கள், பாதுகாப்பு பணியில் இருந்தவா்கள் என சிலா் வெயிலின் தாக்கத்தால் மயக்கமடைந்தனா்.
இதையடுத்து, சம்பவ இடங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா்கள் விரைந்து உரிய முதலுதவி அளித்தனா். அதைத் தொடா்ந்து அருகில் இருந்த மருத்துவமனைகளுக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா்.