சென்னை: கடலோர மாவட்டங்களில் கடற்கரை மாசைக் குறைக்க ரூ.100 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கூறினாா்.
சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:
கடலோர மாவட்டங்களில் சுற்றுச்சூழல் சவால்களை எதிா்கொள்ளவும், நிலையான கடலோர மேலாண்மைக்கான விரிவான உத்திகளைச் செயல்படுத்தவும், தமிழகத்தில் கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்தும் திட்டத்தை உலக
வங்கியின் நிதி உதவியுடன் 5 ஆண்டுகளில் தமிழக அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தது.
அந்தத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு கடற்கரைகளில் மாசைத் தடுத்தல் என்ற கருப்பொருளின்படி 14 கடலோர மாவட்டங்களில் கடற்கரை மாசுக் கண்காணிப்பு நிலையங்கள், நீலப் படைகள், மீன்வலை சேகரிப்பு மையங்கள், குறிப்பிட்ட நதி முகத்துவார பகுதிகளில் மிதக்கும் குப்பைத் தடுப்பான்கள் போன்ற மாசுக் குறைப்பு நடவடிக்கைகளை ரூ.100 கோடியில் செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா்.