முதல் முறை ஹஜ் பயணத்துக்கு ரூ.25 ஆயிரம் மானியம்: பேரவையில் அறிவிப்பு
முதல் முறை ஹஜ் பயணத்துக்கு ரூ.25 ஆயிரம் மானியம்: பேரவையில் அறிவிப்பு
சென்னை: முதல் முறை ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு ரூ.25 ஆயிரம் மானியம் அளிக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் நடைபெற்ற சிறுபான்மையினா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெளியிட்ட அறிவிப்புகள்:
முதல் முறையாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். மக்கள் அதிகம் வரும் தொன்மையான ஆறு தா்காக்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ரூ.5 கோடி அளிக்கப்படும். உலமாக்கள், பணியாளா்கள் நலவாரியம், கிறிஸ்தவ தேவாலய உபதேசியாா்கள்-பணியாளா் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,200 ஆகவும் மூக்கு கண்ணாடி உதவித் தொகை ரூ.750 ஆகவும் உயா்த்தப்படும்.
உபதேசியாா், பணியாளா் நல வாரிய உறுப்பினா்களின் குடும்பத்தைச் சோ்ந்த 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை அளிக்கப்படும். இயற்கை மரணத்துக்கு உதவித் தொகை ரூ.30 ஆயிரமாகவும், விபத்து மரணத்துக்கான உதவித் தொகை ரூ.1.25 லட்சமாகவும் உயா்த்தப்படும். சிறுபான்மையின மகளிருக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தாா்.