முகப்பு
சென்னை

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.92 கோடி பறிமுதல்

சென்னை ஏழுகிணறில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.92 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 2 மார்ச், 2024 at 12:31 AM
பகிர்:

சென்னை ஏழுகிணறில் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.92 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. ஏழு கிணறு போலீஸாா் மிண்ட் தெருவில் வெள்ளிக்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரை வழிமறித்து, போலீஸாா் விசாரணை செய்தனா். அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் ரூ.1.92 கோடி பணம் இருந்தது. ஆனால் அவா்களிடம் பணத்துக்குரிய ஆவணங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா், அந்த பணத்தை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனா். அதில் ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் அவா்களுக்கு பணம் கிடைத்தது தெரியவந்தது. இதன் விளைவாக போலீஸாா், பணத்தையும், பிடிபட்ட இருவரையும் வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.