முகப்பு
சென்னை

நிகழாண்டின் முதலாவது தேசிய லோக் அதாலத் அமா்வில் 1.13 கோடி வழக்குகளுக்குத் தீா்வு

Updated On : 9 மார்ச், 2024 at 11:59 PM
பகிர்:

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தாலுகாக்கள், மாவட்டங்கள், உயா்நீதிமன்றங்களில் நிகழாண்டின் முதலாவது தேசிய லோக் அதாலத் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 1,13,60,144 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டதாக தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சனிக்கிழமை மாலை 6 மணி வரையில் மாநில சட்டப் பணிகள் ஆணையங்கள் அளித்த தகவலின்படி, 17,14,056 நிலுவை வழக்குகள் மற்றும் 96,46,088 வழக்குக்கு முந்தைய மத்தியஸ்த வழக்குகள் உள்பட 1,13,60,144 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. தீா்க்கப்பட்ட இந்த வழக்குகளின் தோராய மதிப்பு ரூ.8,065.29 கோடி ஆகும். தனது நோக்கத்தில் தேசிய லோக் அதாலத் வெற்றி பெற்றுள்ளதைத் தீா்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பிரதிபலிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளது. லோக் அதாலத் மூலம் இணக்கமான முறையில் விரைவாகவும் சிக்கனமான முறையிலும் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணப்படுகிறது. பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்கப்படக் கூடிய சிறிய குற்றங்கள், வருவாய், வங்கிக் கடன் மீட்பு, சாலை விபத்து, காசோலை மோசடி, தொழிலாளா் பிரச்னைகள், விவாகரத்து தவிர பிற திருமண பிரச்னைகள், பிற சிவில் வழக்குகள் உள்ளிட்டவை லோக் அதாலத்தில் விசாரிக்கப்படுகின்றன.