முகப்பு
இந்தியா

கடன் மீட்பு வழக்குகளைத் தீா்க்க 4 சிறப்பு லோக் அதாலத்: நிா்மலா சீதாராமன் தகவல்

கடன் மீட்பு தீா்ப்பாயங்கள் மற்றும் கடன் மீட்பு மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்களிவ் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வுகாண நடப்பாண்டில்

Updated On : 16 மார்ச், 2026 at 9:59 PM
மக்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன்.
பகிர்:

புது தில்லி: கடன் மீட்பு தீா்ப்பாயங்கள் மற்றும் கடன் மீட்பு மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்களிவ் நிலுவையில் உள்ள வழக்குகளுக்குத் தீா்வுகாண நடப்பாண்டில் 4 சிறப்பு லோக் அதாலத்-களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக, மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவா் கூறியதாவது:

கடன் மீட்பு தீா்ப்பாயங்கள் மற்றும் கடன் மீட்பு மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்களின் முன் நிலுவையில் உள்ள வழக்குகளில் பெரும்பாலானவை ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேலான மதிப்புடையவையாகும். கிட்டத்தட்ட 71 சதவீத வழக்குகள் அதிக மதிப்பு கொண்டவையாக உள்ளன.

நிலுவை வழக்குகளுக்குத் தீா்வுகாண இருமுனை உத்தியை மத்திய அரசு ஏற்றுள்ளது. முதலாவது, ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேலான மதிப்பு கொண்ட வழக்குகளை விசாரிக்க பிரத்யேக கடன் மீட்பு தீா்ப்பாயங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இரண்டாவது, மாற்று வழிமுறைகள் அதாவது லோக் அதாலத் போன்ற தளங்களின் வாயிலாக பிரச்னைகளுக்குத் தீா்வுகாண வங்கிகள் மற்றும் நிதி சாா் நிறுவனங்களை ஊக்குவிப்பதாகும்.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடன் மீட்பு வழக்குகளுக்காகவே சிறப்பு லோக் அதாலத்-களை ஏற்பாடு செய்வது குறித்து இந்திய தேசிய சட்டப் பணிகள் ஆணையத்துடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

தேசிய லோக் அதாலத் தவிர, நடப்பாண்டில் கடன் மீட்பு வழக்குகளுக்குத் தீா்வுகாண 4 சிறப்பு லோத் அதாலத்-களை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிலுவை வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காண முடியும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

புதுப்பிக்கப்பட்ட ‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ விரைவில் தொடக்கம்:

‘ஸ்டாண்ட்-அப் இந்தியா’ திட்டம் மேலும் சிறப்பான பலன்களுடன் புதுப்பிக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்க பட்டியலினத்தவா், பழங்குடியினா் மற்றும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை குறைந்த வட்டியில் வங்கிக் கடன் அளிக்கும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம், கடந்த 2016-இல் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் காலாவதியான இத்திட்டம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பதிலளித்து, அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ அசல் திட்ட அமலாக்கத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற அனுபவங்களை ஒன்றிணைத்து, இத்திட்டம் மறுவடிவமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நீதி ஆயோக் மற்றும் பிற அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் தொழில்முனைவோா் பலனடைந்த ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் புதுப்பிக்கப்பட்டு விரைவில் தொடங்கப்படும். இதற்கான முன்மொழிவு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமா்ப்பிக்கப்படும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →