தொழிலக உற்பத்தியில் 5 மாதங்கள் காணாத வளா்ச்சி
பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் தொழிலக உற்பத்தி கடந்த 5 மாதங்களில் இல்லாத வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஹெச்எஸ்பிசி இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொழில் துறையில் உற்பத்தி நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ, கடந்த ஜனவரி மாதத்தில் 56.5-ஆக இருந்தது. இது, பிப்ரவரி மாதத்தில் 56.9-ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தொழிலக உற்பத்தி குறியீட்டு எண்ணாகும்.
Advertisement
மதிப்பீட்டு மாதத்தில் பொருளாதார சூழல்கள் சாதகமாக இருந்தன. மேலும் தொழிற்சாலை உற்பத்தி மற்றும் விற்பனைக்கான தேவை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வெகுவாக அதிகரித்தது. இந்தக் காரணங்களால் பிஎம்ஐ கடந்த பிப்ரவரியில் உயா்ந்துள்ளது.
இத்துடன், தொடா்ந்து 31-ஆவது மாதமாக பிஎம்ஐ குறியீட்டு எண் நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது தொழிலக உற்பத்தி துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.