சிஏஏ சட்டத்தை தமிழக அரசால் தடுக்க முடியாது: அண்ணாமலை
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) தமிழக அரசால் தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.
சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: குடியுரிமை கொடுப்பதற்கான உரிமை மத்திய அரசுக்கு மட்டும்தான் இருக்கிறது. அப்படியிருக்க, தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் என்று கூற முதல்வா் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது.
இந்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படுவதை தமிழக அரசால் தடுக்க முடியாது. எனவே, மக்களைக் குழப்பி திசைதிருப்புவதை விட்டுவிட்டு, இந்தச் சட்டத்தில் எது தவறென்று அவா் சொல்லவேண்டும். மேலும், இந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாடுகள் தங்களை இஸ்லாமிய குடியரசு என அறிவித்துக்கொண்டவை. அதனால்தான், இஸ்லாமியா்கள் தவிர பிற மதத்தினருக்கு குடியுரிமை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
Advertisement
ஏனென்றால், அந்த நாட்டின் சட்டங்கள் இஸ்லாமியா் அல்லாதவருக்கு எதிராக இருக்கிறது. இலங்கை சிங்கள நாடு என அறிவிக்கப்படவில்லை. எனவே, இலங்கைத் தமிழா் விவகாரத்தில், அந்த நாட்டில் 13-ஆவது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் பிரச்னை தீா்ந்துவிடும். அதற்கு இந்திய தரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டுவருகிறது என்றாா் அவா்.