திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி: அண்ணாமலை பேச்சு
திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்திருப்பது...
சென்னை: ஊழல் செய்யவதற்காகவே திட்டங்களை கொண்டு வந்து, மக்களை அவதி அடைய செய்யும் தீயசக்தி திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி என பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கே. அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் களம் காணும் மருத்துவர் தமிழிசையை ஆதரித்து திங்கள்கிழமை மயிலாப்பூர் திருவள்ளுவர் சாலை, விசாலாட்சி தோட்டம், மந்தைவெளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியது:
Advertisement
கடந்த 5 ஆண்டுகால, தீயசக்தி திமுகவின் காட்டாட்சியில் 8,008 கொலைகள், 2,080 பாலியல் குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் 39,999 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்தது தான் திமுக தனது ஆட்சியில் செய்துள்ள ஒரே சாதனை.
தமிழகத்தின் தலைநகரமாக திகழும் சிங்கார சென்னையை, “மூழ்கிக்கொண்டிருக்கும்” சென்னையாக மாற்றி மழைநீர் வடிகால் என்ற பெயரில் திமுகவினர் ரூ.4000 கோடி முறைகேடு செய்யவே ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள். சென்னை மக்கள் கோடிக்கணக்கில் வரிமேல் வரி செலுத்தியும் சாலைகள், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் கூட அவல நிலையில் தான் இன்றும் இருக்கிறது என்பது வெட்கக்கேடு. கொள்ளையடிக்கவும், ஊழல் செய்யவும் மட்டுமே திட்டங்களை கொண்டு வந்து, மக்களை அவதி அடைய செய்யும் தீயசக்தி திமுகவை தமிழக மக்கள் விரட்டியடிக்க போவது உறுதி.
எனவே, மாற்றத்தின் நம்பிக்கையாக, மக்களாட்சியின் அடையாளமாக இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மயிலாப்பூர் தொகுதி பாஜக வெற்றி வேட்பாளர் தமிழிசைக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.